(எம்.சி. அன்சார்)
பயனாளிகள் வாழ்வாதார உதவிகள் மூலம் தங்களது வாழ்வினை முன்னேற்ற வேண்டும். நாங்கள் அரசாங்கத்தின் வெறும் உதவிகளை மட்டும் நம்பி இருக்காமல் தனது உழைப்பின் மூலம் எழுந்து நிற்க வேண்டும். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.
தேசிய ஒருங்கழணைப்பு நல்லிணக்க அமைச்சின் நல்லிணக்கம் நோக்கிய பொருளாதார வலுவூட்டல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சம்மாந்துறை செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நேற்று(27) பிரதேச செயலாளர் எஸ்.எம்.முஹம்மட் ஹனீபா தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது சம்மாந்துறை செயலகத்திற்கு உட்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் 62 குடும்பங்களுக்கு 6.72 மில்லியன் ரூபா பொறுமதியான தையல் இயந்திரங்கள், மா அரைக்கும் இயந்திரம், மேசன் உபகரணங்கள், ஓடாவி உபகரணங்கள், சிறுகைத்தொழில் உபகரணங்கள், விவசாய உபகரணங்கள் என்பன பிரதம அதிதியினால் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தகால சூழ்நிலைகளினால் பாதிப்புக்குள்ளான மக்களின் வாழ்வாதரத்தை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் இத்திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாட்டின் வறுமையை நீண்டகாலம் நிலைத்திருக்கச் செய்யக்கூடாது. அதனை தோல்வி அடையச் செய்து நாட்டினை முன்னேற்ற வேண்டும். நாம் அனைவரும் தனித்து எழுந்துநின்று தன் குடும்பத்தினையும், நாட்டினையும் முன்னேற்றப் பாதையில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
வறிய மக்களை தட்டியெழுப்பி அவர்களது வாழ்வினை மேம்படுத்தி அவர்களை சமூகத்தில் உயர்ந்த இடத்தினை அடைவதற்கு அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தியுள்ளது. இதனை பயன்படுத்தி தங்களது வாழ்வினை முன்னேற்ற கடின முயற்சிகளை மேற்கொண்டு நாட்டினை வறுமையற்ற நாடாக முன்னேற்ற வேண்டும்.
இந்நிகழ்வில் மாவட்ட பிரதி திட்டப்பணிப்பாளர் எம்.எஸ்.தௌபீக், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம்.சுல்பிகார், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோகச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.சகுபீர், பிரதேச செயலக கணக்காளர் திருமதி ஹீசைனா பாரீஸ், திவிநெகும அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றம் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.